ETV Bharat / state

அட்டாக் பாண்டி சிறை விடுப்பு மனுவுக்கு பதிலளியுங்கள் - உயர் நீதிமன்றக் கிளை

author img

By

Published : Jul 9, 2021, 7:19 AM IST

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் சிறைக் கைதி அட்டாக் பாண்டியின், 10 நாட்கள் அவசர விடுப்பு மனுவுக்கு, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் அட்டாக் பாண்டி. இவருக்கு மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், 3 ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அட்டாக் பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அட்டாக் பாண்டியின் மனைவி தயாள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், 'தினகரன் அலுவலக எரிப்பு வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அட்டாக் பாண்டி ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவசர விடுப்பு வழங்க உத்தரவிட கோரிக்கை

தற்போது எனது கணவரின் தாயாரான ராமுத்தாய், உடல் நலம் குன்றிய நிலையில் உள்ளார். எனது கணவரின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவசர சிறை விடுப்பு வழங்க மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார்.

எனவே, தாயாரைப் பார்க்க வேண்டி, எனது கணவரான பாண்டிக்கு 10 நாட்கள் அவசர விடுப்பு வழங்கி உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி, அமர்வு முன் நேற்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வாதத்தை கேட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் மனுதாரர் தரப்பு, அரசு வழக்கறிஞர் ஆகியோர் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வருகின்ற ஜூலை 26ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் நிவாரணத் தொகை - மாநில அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.